டெல்லியில் டீசல் கார்களுக்கான தடை: ரூ. 1,000 கோடி பெருமான கார்கள் தேங்கியுள்ளதால் மஹிந்த்ரா முடங்கி உள்ளது

published on டிசம்பர் 16, 2015 09:21 am by nabeel

டெல்லி அரசாங்கம், சமீபத்தில் மாசுபாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக  எடுத்துள்ள நடவடிக்கைகள் வாகன சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த சூழலினால், அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும், மஹிந்த்ரா நிறுவனத்திற்கே மிகவும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாகனங்களில், டீசல் இஞ்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் டீசல் கார்களைத் தடை செய்யும் உத்தரவு தொடர்வதால், ஏறத்தாழ ரூ. 1,000 கோடி பெருமான டீசல் கார்கள் விற்பனை ஆகாமல், டீலர்களிடம் உள்ளன என்று தற்போது வந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த்ரா நிறுவனத்தைத் தவிர டாடா மோட்டார்ஸ், டொயோடா, ஃபோர்ட், நிஸ்ஸான் மற்றும் ஆடம்பர கார்களான ஆடி, BMW மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களும் இந்த கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றன. ஏனெனில், இந்தியாவின் மொத்த வாகன விற்பனையில், தேசிய தலைநகரான டெல்லி மட்டுமே 7 சதவிகித பங்களிக்கிறது. மேலும், இது ஆடம்பர கார்களுக்கான மிகப் பெரிய சந்தையாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது, BS (பாரத் ஸ்டேஜ்)–IV மாசு கட்டுப்பாட்டு விதி டெல்லியில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஃப்யூயல் பாலிசி மூலம், BS –V & VI விதியை செயல்படுத்த வேண்டிய தேதிகளுக்கு முன்னதாகவே, இந்த தடை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விவரமாகும்.

ஏற்கனவே, முன் பணத்தைக் கொடுத்து டீசல் கார்களை பதிவு செய்து, டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வேறு வழி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், ஆப்ஷன் இருந்தவர்கள், பெட்ரோல் வகைக்கு மாறிவிட்டார்கள். மேலும், டெல்லி NCR பகுதியில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படாததால், பல வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை அந்த பகுதியில் பதிவு செய்து கொள்கின்றனர். மஹிந்த்ரா இந்தியாவின் தயாரிப்பான போலேரோ, குவாண்டோ, தார், TUV 300, ஸ்கார்பியோ, வேரிட்டோ, வேரிட்டோ வைப், XUV 500, ஜைலோ மற்றும் e2o போன்ற கார்களில், e2o மட்டுமே டீசல் இல்லாமல் ஓடக்கூடிய வாகனமாகும். டெல்லியில் விற்பனை ஆகியுள்ள கார்களில், சுமார் 36 சதவிகிதம் டீசல் இஞ்ஜினால் சக்தியூட்டப்பட்டவை ஆகும்; SUV மற்றும் பயன்பாட்டு வாகனங்களைப் பொறுத்தவரை 90 சதவிகிதம் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டவை ஆகும். 2016 –ஆம் ஆண்டு தொடக்கம் முதல், கார்களின் விலை உயர்வு அமல் படுத்தப்பட உள்ளதால், பெரும்பாலானவர்கள் கார் வாங்க முடிவு செய்துள்ள இந்த நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை, வாகனத்துறையை மட்டும் பாதிக்கவில்லை, தங்களது புதிய காரின் டெலிவரிக்காக ஆவலுடன் காத்துக்  கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் பெரிதாக பாதிக்கின்றது. இது தவிர, ஆடு-ஈவென் ஃபார்முலா என்ற புதிய திட்டமும் இவற்றோடு இணைக்கப்பட்டுள்ளதால், டெல்லி அரசாங்கத்தின் மிகப் பெரிய அதிகார இலக்கு வாகனத்துறை மீது பாய்ந்துள்ளதோ என்று, இந்த சூழ்நிலையில் யோசிக்கத் தோன்றுகிறது.

மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனத்தின் இயக்குனரான பவன் கோயென்கா, “அனைத்து டீசல் வாகனங்களும் நிர்ணயிக்கப்பட்ட அரசு விதிமுறைகளை மீறாமல் இருக்கும் போது, ஏன் டீசல் வாகனங்களை ஒரு குற்றவாளியாக பார்க்கவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார். மேலும், அவர், “ஒரு தயாரிப்பு அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு இருக்கும் போது, அதற்கு எப்படி தடை விதிக்க முடியும்? இத்தகைய ஒரு நடவடிக்கையை அமல் படுத்துவதற்கு முன், வாகனத்துறையின் பிரதிநிதிகளுடன் எந்த ஆலோசனையும் அரசு நடத்தவில்லை. டீலர்களின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான கார்களை வைத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்கான விளக்கங்கள் வெகு விரைவில் வந்துவிடும் என்று நம்புகிறோம்,” என்று வருத்ததுடன் கூறினார்.
 
இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) இயக்குனரான விஷ்ணு மாதுர், “வாகனத்துறை பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. கடந்த பல வருடங்களாக, நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை நாங்கள் என்றும் மீறியதில்லை. ஒரு முழுமையான திட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றால், எந்த விதமான தெளிவான முடிவுகளையும் எடுக்க முடியாது,” என்று தன் வருத்ததைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience