2016 -ஆம் ஆண்டில், 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்
ஊரெங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பேச்சாகத்தான் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், 2015 -ஆம் வருடத்தில் மட்டும் 15 கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது; 2015 வருடத்தில் 32 சதவிகித விற்பனை வளர்ச்சியை எட்டியயுள்ளது; மற்றும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த ஆடம்பர கார் என்ற பெருமையை உடைய புதிய GLE 450 AMG கூபே காரை 2016 ஆம் ஆண்டின் முதல் காராக அறிமுகப்படுத்தி, இந்த வருடத்தை ஆர்பாட்டமாக தொடங்கவுள்ளது என்று இந்த நிறுவனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தும் இந்நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை எடுத்துரைக்கின்றன. ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ், இத்தகைய கோலாகலத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், 12 புதிய கார்களை 2016 -ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஆர்பாட்டமான வெற்றிக்குப் பிறகு, இந்த செய்தியை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2015 வருடத்தின் '15 லாஞ்ச்' திட்டம் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. முன்பெப்போதும் இல்லாத அளவில், கடந்த வருடம் மட்டும் இந்நிறுவனம் 13,502 கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO தலைமை நிர்வாக அதிகாரியான ரோலாண்ட் போல்கர், “இந்திய வாகன சந்தையில் சாதகமற்ற சூழ்நிலை மற்றும் மந்தமான பொருளாதார நிலைமை இருந்த போதிலும், எங்களது முழுமையான சேவை மற்றும் நிதி திட்டங்கள் போன்றவை, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எங்களது எல்லையற்ற ஆர்வம் மற்றும் விரிவாக்கப்பட்ட எங்களது நெட்வொர்க் ஆகியவற்றிற்கு ஆதாரமாக செயல்பட்டு வந்ததால், எங்களது வளர்ச்சி அதிகமாகியுள்ளது,” என்றார்.
பென்ஸ் நிறுவனம் 2015 -ஆம் வருடத்தில், CLA-கிளாஸ், C 220 CDI, B-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட், A200 CDI காரின் செயல்திறன் மேம்பாடு, G63 AMG, AMG S 63 சேடான், C63 S AMG, ML- கிளாஸ், AMG GT S, E 400 கப்ரியொலெட், CLS 250 CDI, C 220 CDI (உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது), S 600 கார்ட், S 500 கூபே, S 63 AMG மற்றும் A 180 ஸ்போர்ட் போன்ற 15 விதமான கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
பென்ஸ் நிறுவனத்தின் 2016 –ஆம் ஆண்டிற்கான திட்டங்களைப் பற்றி நாம் கேட்ட போது, “மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2016 – ஆம் ஆண்டிற்கான பல விதமான திட்டங்களில், 12 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே பிரதான திட்டமாகும். இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சில மாடல்களின் முந்தைய வெர்ஷன்கள், இந்தியாவில் இது வரை அறிமுகம் ஆகவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள சந்தைகள் மற்றும் புதிதாக உருவாகவுள்ள சந்தைகள் என பல இடங்களில், தற்போதுள்ள அவுட்லெட்கள் தவிர, மேலும் 10 புதிய அவுட்லெட்கள் ஆரம்பிக்கப்படும்,” என்று இந்நிறுவனம் கூறியது.
கடந்த வருடம், இந்நிறுவனத்தின் சேடான் பிரிவு கார்களின் விற்பனை மட்டும், அபாரமான 42 சதவிகித வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. CLA காரில் ஆரம்பித்து, C கிளாஸ், E கிளாஸ் மற்றும் அதற்குப் பின் அறிமுகமான S கிளாஸ் போன்ற அனைத்து சேடான் கார்களும் தங்களது பிரிவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டன.
"2016 ஆண்டு, பல வகைகளில் எங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் விதத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையை, இந்த வெற்றி தருகிறது. எங்களது நிலையான கொள்கைகள் மற்றும் சரியான சீர்திருத்தங்கள் மூலம், தற்போதைய வளர்ச்சியின் வேகம் நிச்சயமாக நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்று போல்கர் கூறினார்.
புதிய கார்களை அறிமுகப்படுத்துவது என்ற நோக்கத்தைத் தவிர, மெர்சிடிஸ் நிறுவனம் தனது சில்லறை வணிகத்தை II டயர் மற்றும் III டயர் நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. ரொனால்ட் போல்கர், “விற்பனையில் அபார வெற்றி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அருமையான மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுப்பது போன்றவற்றை மட்டும் நாங்கள் எங்களது இலக்காக எண்ணவில்லை. கடந்த சில ஆண்டுகளில், இந்த சமூகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நல்மதிப்பை உருவாக்காவும், தொடர்ந்து சீரான பெரிய வளர்ச்சியை எங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தவும் நாங்கள் அரும்பாடுபட்டுள்ளோம்,” என்று கூறினார்.
மேலும் வாசிக்க
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2015 விற்பனை வளர்ச்சி: 32 சதவிகிதம் பதிவு செய்து புதிய சாதனை